2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் : இந்திய வம்சாவளி பெண் எம்.பி போட்டியிட திட்டம்
Nov 13 2018 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்திய வம்சாவளி பெண் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. இதில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன், இந்திய வம்சாவளி செனட்டர் கமலா ஹாரிஸ், செனட் சபை உறுப்பினர்கள் எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்த வரிசையில் அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யான துளசி கப்பார்டின் பெயரும் தற்போது இணைந்து இருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்கு சொந்தமான சமோயா தீவை சேர்ந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 4-வது முறையாக கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துளசி கப்பார்ட், வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி வேட்பாளர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.