மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறவில்லை - இந்திய ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விளக்கம்
Apr 12 2019 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பிரதமராக மீண்டும் திரு. மோடி பதவியேற்றால், இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு அது சாதகமானதாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாக வெளியான தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தலில், திரு.மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால், இந்தியா-பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தொடர வாய்ப்பு இருப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இந்த கருத்து இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானிலும் இம்ரான் கருத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன.
இந்நிலையில், இம்ரான்கான் கருத்து குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரேஷி விளக்கம் அளித்துள்ளார். இந்திய ஊடகங்கள், அனைத்து விஷயங்களையும் பதற்றத்துக்கு உரியவையாக மாற்றி விடுவதாகவும், இம்ரான்கானின் கருத்து, அவர் சொன்னதைத் தாண்டி வேறொரு முறையில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மோடி குறித்து இம்ரான்கானுக்கு என்ன கருத்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றும், இந்தியத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.