அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத காட்டுத்தீ - இயற்கைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
Aug 24 2019 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத காட்டுத்தீயால் பிரேசில் பல நகரங்கள் புகை மூட்டத்தால் மூடப்பட்டுள்ளது. இது இயற்கைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடு அடிக்கடி காட்டுத்தீயால் கருகி வருகிறது இனி அமேசான் காடு தப்புமா என்று சந்தேகப்படும் அளவிற்கு பற்றி எரிந்து வருகிறது. தீயின் கோர நாக்குகள் கொஞ்சமும் இரக்கமில்லாமல் பல லட்சம் மரங்களை எரித்து நாசப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9500 முறையும் இந்த ஆண்டில் இதுவரை 75 ஆயிரம் முறையும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மட்டுமல்ல உலக நாடுகளையும் கவலையடைய செய்துள்ளது.
ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ பூமிக்கு 20 சதவீதம் ஆக்சிஜன் வழங்கும் அமேசான் காடு காட்டுத்தீயால் அழிந்து வருவது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். பூமியின் நுறையிரல் என்று அழைக்கப்படும் அமேசானின் அழிவை யாரும் ஏன் கண்டுகொள்ளவில்லை என கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க விண்வெளி மையமான நாசா விண்வெளியில் இருந்து செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக எழும் புகை பிரேசிலின் பல மாநிலங்கள் வரை பரவியுள்ளதை சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளது. அந்நாட்டின் சாவ் பாலா நகரம் கரும்புகையால் இருளில் மூழ்கியுள்ளது. பகலில் இருள் போல் காட்சியளிக்கிறது.
அமேசான் காடுகளின் அழிவு பூமிக்கு பேராபத்து என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பூமி வெப்பமடைந்து வரும் நிலையில் அமேசான் காடுகளின் அழிவு உலகில் கார்பன் வாயு அதிக அளவில் பரவ காரணமாகி பூமியின் அழிவை பலமடங்கு அதிகரிக்கச்செய்யும் என்றும் எச்சரித்துள்ளனர்.
பிரேசில் விவசாயிகள் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காக அடிக்கடி தீ மூட்டி வருவதும், அதனை பிரேசில் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதுவுமே இந்த பிரச்சினையின் ஆணி வேராக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல பிரேசிலில் தற்பொழுது அதிபராக உள்ள போல்சொனாரோவின் கொள்கைகள் காடுகளை அழித்து பிரேசிலின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் உள்ளதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போசொனாரோ ஆட்சிக்கு வந்த பிறகுதான் அமேசான் காடு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும் நேரடியாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
அமேசான் காட்டை அழிக்கும் விவசாயிகள், கார்பரேட் நிறுவனங்கள், வனக்கொள்ளையர்களை பிரேசில் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டுமே இனி பூமியின் நுரையீரல் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.