ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்ற கொள்கையில் உள்ள தமிழக அரசு, ஆலை எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ஏன்? - நீதிபதிகள் கேள்வி
May 22 2019 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களின் மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். ஆலைக்கு எதிராக போராடியவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தூத்துக்குடியை சேர்ந்த மோகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின்கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக்கூடாது - இந்தப் பிரிவுகளின்கீழ் புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக உள்ள நிலையில், அதே கருத்து உடையவர்களை துன்புறுத்துவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.