தேனி தொகுதியில் ஏற்கனவே சீல் உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டதால் வேட்பாளர்கள் அதிர்ச்சி - முறையிட்டும் கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்
May 24 2019 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது பெரும் குளறுபடிகள் செய்யப்பட்டதாக புகார் எழுந்திருந்த நிலையில், தேனி தொகுதியில் முன்கூட்டியே சீல் உடைக்கப்பட்ட இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதால், வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத் குமாரை எப்படியேனும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், ஓ. பன்னீர்செல்வம் மறைமுகமான மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தது குறித்து, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் உச்சகட்டமாக, உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி வாக்கு இயந்திரம், சீல் உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டனர். தேனி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு.தங்க தமிழ்ச்செல்வன், இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரினார்.
இதனிடையே, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் தனது மகனுக்காக ஓ.பன்னீர்செல்வம் 400 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, விளாத்திகுளம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் திரு.மார்க்கண்டேயன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென என வலியுறுத்தினார்.