தமிழ்நாட்டிலிருந்து, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு, புதிதாக 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் : ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Jun 26 2019 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு, புதிதாக 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. T. ரத்தினவேல், டாக்டர் V. மைத்ரேயன், திரு. K.R. அர்ஜூனன், டாக்டர் R. லட்சுமணன், திரு. D. ராஜா, திருமதி. கனிமொழி ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது.
காலியாகும் இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்த அறிவிக்கை, ஜூலை 1-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 8-ம் தேதியாகும். அடுத்த நாள் 9-ம் தேதியன்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை வாபஸ்பெற ஜூலை 11-ம் தேதி கடைசி நாளாகும். இதனைத் தொடர்ந்து, ஜூலை 18-ம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்று காலை 9 மணியிலிருந்து, மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும்.