கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பழுதான மின் கம்பம் உடைந்து விழுந்து 3 பேர் படுகாயம் : மின் வாரிய ஊழியர்கள் மெத்தனப் போக்கு - பொதுமக்கள் குற்றச்சாட்டு
Jun 26 2019 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போச்சம்பள்ளி அருகே, பழுதான மின் கம்பம் உடைந்து விழுந்ததில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் பலத்த காயத்துடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல முறை மனு அளித்தும், மின் வாரியம் நடவடிக்கை எடுக்காததே விபத்திற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, ரெட்டிப்பட்டி கிராமத்தில் பெரும்பாலான மின் கம்பங்கள் பழுதடைந்து, அபாய நிலையில் உள்ளன. அவற்றை உடனடியாக மாற்றித் தர வேண்டுமென கிராம மக்கள், கல்லாவி மின்வாரிய அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளனர். இந்நிலையில், முத்து என்பவரது வீட்டின் முன்பு இருந்த மின் கம்பம் திடீரென உடைந்து விழுந்ததில், வீட்டின் வெளியே இருந்த 2 குழந்தைகள் மீது மின்கம்பம் விழுந்தது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மூன்று பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின் வாரிய ஊழியர்களின் மெத்தனப் போக்கு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பழுதான மின் கம்பங்களை உடனடியாக மாற்றவேண்டும், பாதிக்கப்பட்ட மூவருக்குமான உயர் சிகிச்சை செலவுகளை மின் வாரியமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.